பீகார்: ஸ்டிரைக் செய்யும் டாக்டர்கள் கையை வெட்ட வேண்டும்: சுகாதார அமைச்சர் சௌபே
பாட்னா: அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஜூனியர் மருத்துவர்களின் கையை வெட்ட வேண்டும் என்று பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி சௌபே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்தை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்களில் ஒரு பிரிவினர் தெரிவி்த்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் ஜூனியர் மருத்துவர்கள் அதிக சம்பளம் கேட்டு அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மாநிலத்தில் நடந்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வின சௌபே பேசியதாவது,
அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுக்கத் தெரியும். அவர்களி்ன் கைகளை வெட்டவும் தெரியும். மக்கள் நலனைப் பாதிக்கும் வகையில் செயல்படும் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைக் கேட்ட ஜூனியர் மருத்துவர்களில் ஒரு பிரிவினர் கடுப்பாகி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் சௌபேயை தொடர்பு கொண்ட கேட்டபோது, நான் சும்மா ஒரு பழமொழி சொன்னேன். அதற்காக நிஜமாக மருத்துவர்களின் கையை வெட்டுவது என்று பொருளில்லை. அவர்கள் அதிக சம்பளம் கேட்டு அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வதால் சுகாதாரப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்றார்.
அதே நிகழ்ச்சியில் சபாநாயகர் உதய் நாராயண் சவுதரி, விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரேம் குமார் ஆகியோரும் பேசினர்.