கொல்கத்தா புத்தக கண்காட்சி: மமதாவின் நூல்கள்தான் விற்பனையில் டாப்!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள அரங்கம் உட்பட பலவற்றிலும் மமதாவின் நூல்களைத் வாங்குவதற்கு நிற்கும் கூட்டம் எழுத்தாளர்களையும் பதிப்பகத்தாரையும் திக்குமுக்காட வைத்து வருகிறது.
பரபரப்பான, வெற்றிகரமான ஒரு அரசியல்வாதியாக முதலமைச்சராக மமதா வலம் வந்தாலும் ஆண்டுதோறும் நடைபெறும் கொல்கத்தா புத்தக கண்காட்சிக்காக புதிய நூல்களை எழுதுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக மமதா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
1995 ஆம் ஆண்டு முதல் இதுவரை 33 நூல்களை எழுதியுள்ளார். கடந்த வாரம் புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் 3 நூல்களை வெளியிட்டார்.
கடந்த வங்க மொழி எழுத்தாளர்களான மணி சங்கர் முகர்ஜி மற்றும் புத்ததேவ் குஹா ஆகியோரது நூல்களின் விற்பனைக்கு சமமாக மமதாவின் நூல்கள் விற்பனையாகி இருந்தன.
இந்த ஆண்டோ தமது அரசியலைப் போலவே அனைவரையும் விட முன்னணியில் இருக்கிறார்.
இவரது நூல்கள் தங்களது கடைகளில் "ஸ்டாக்" இல்லை என்று சொல்வதை பெருமைக்குரிய விஷயமாக புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்திருப்போர் கூறி வருகின்றனர்.
அண்மையில் மமதா எழுதி வெளியிட்ட நூல் "Poribortan"(மாற்றம்). சமூகத்தின் கீழ்நிலையில் இருந்து வலிமை மிக்க அதிகாரப் பதவிக்கு தாம் வந்ததைப் பற்றி விவரித்துள்ளார்.
"Kobita". என்ற நூலில் மமதாவின் 70 கவிதைகள் இடம் பிடித்துள்ளன. மறக்க முடியாத நினைவுகள் என்பது மற்றொரு நூல்.
"Shisu Shanthi", Ajab Chhora" இந்த இரண்டு பாடல் புத்தகங்களும் குழந்தைகளின் மனதை கொள்ளையடித்துள்ளன.
மமதாவின் அரசியல் கட்டுரைகள் அடங்கிய நூல்தான் ஒட்டுமொத்த விற்பனையில் "டாப்"!