பாளை காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி திடீர் ஆய்வு: புஷ்பராயன் உள்பட 25 பேர் மீது வழக்கு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் புஷ்பராயன் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் உடையார் மற்றும் இந்து தேசிய காங்கிரஸ் தலைவர் மதுசூதனபெருமாள், முருகானந்தம் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தி பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சிறைக்கு செல்லும் போது கைதான அனைவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படங்களை கையில் வைத்தபடி சென்றனர்.
முன்னதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி பஷீர் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினரை சந்தித்து குறைகளை கேட்டார்.
அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்து எங்கள் மீது மட்டும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், தாக்குதலில் ஈடுபட்ட புஷ்பராயன் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து புஷ்பராயன் தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்து முன்னணியின் உடையார் புகாரின் பேரில் புஷ்பராயன் உள்ளிட்ட 25 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications