சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி கையில் ப.சிதம்பரம் எதிர்காலம்!

2ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பான முடிவுகளை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்தபோது, நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவருடன் கலந்து ஆலோசித்தே பல முடிவுகளை எடுத்தார் ராசா. எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்பது சுப்பிரமணியம் சாமியின் கோரிக்கையாகும்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று அளித்த தீர்ப்பின்போது, ப.சிதம்பரத்தை விசாரிப்பது தொடர்பாக விசாரணை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று அறிவித்தது.
இதையடுத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் நீதிபதி ஓ.பி.ஷைனியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஷைனி எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே ப.சிதம்பரம் இந்த வழக்கில் சேர்க்கப்படுவாரா என்பது தெரிய வரும்.
ஒருவேளை ப.சிதம்பரத்தை விசாரிக்க நீதிபதி ஷைனி அனுமதி அளித்தால், ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டி வரும். அப்படி நேரிடும் பட்சத்தில் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிடும். ஒருவேளை ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடிவு செய்யுமானால் அவர் கைது நடவடிக்கையிலும் சிக்கும் சூழல் உருவாகலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிக்கிக் கைதான யாருக்குமே ஜாமீன் தர தொடர்ந்து மறுத்து வந்தவர் நீதிபதி ஷைனி. குறிப்பாக கனிமொழியின் வக்கீல் கூறிய அனைத்து வாதங்களையும் தொடர்ந்து நிராகரித்து வந்தவர் என்பதால் ப.சிதம்பரம் தொடர்பாக ஷைனி என்ன சொல்லப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications