இப்போது இருப்பதே அருமையான பிரதமர்தான், ராகுலுக்கு பிரதமர் ஆசை இல்லை-பிரியங்கா
ரேபரேலி: பிரதமராக வேண்டும் என்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல என்று அவரது சகோதரி பிரயங்கா வாத்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரங்கா வாத்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிரதமராவது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. தற்போதே நமக்கு மிகவும் அருமையான பிரதமர் உள்ளார். நேர்மையாகவும், கடினமாக உழைக்கக்கூடிய பிரதமர் கிடைத்ததிருப்பதால் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ ஆகும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வழுப்படுத்துவது தான் தற்போதைக்கு ராகுலின் நோக்கம். அவர் தனது நற்பெயர் கெட்டுவிடுமோ என்றெல்லாம் பயப்படுபவர் அல்ல. முன்னாள் நின்று வழிநடத்திச் செல்ல கோழைகள் தான் அஞ்சுவார்கள்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வழுவாக இல்லாவிட்டாலும், அங்கு பாடுபட்டு கட்சியை வளர்க்கப் போவதாக கடந்த 2007ம் ஆண்டே ராகுல் என்னிடம் தெரிவித்தார். இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் என் சகோதரர் பாடுபடுகிறார். இளைஞர் காங்கிரஸில் ராகுல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எந்த கட்சியிலும் இல்லாத ஜனநாயகத்தை காங்கிரஸில் கொண்டு வருகிறார். நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால் கடந்த தடவையைவிட இந்த முறை காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
கடந்த 22 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் தலைதூக்கியுள்ளன. இதைப் பார்த்து பார்த்து மக்கள் வெறுத்துவிட்டனர். மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலம் பின்தங்கியுள்ளது. நான் முன்னேற்றத்தை நோக்கி பணியாற்றுகிறோம். இது சாதி, மத அரசியலை விட உயர்ந்தது. ஊழல் அரசியல் இனியும் நீடிக்கக் கூடாது என்றார்.
பிரியங்கா கடந்த 3 நாட்களாக ராகுலின் தொகுதியான அமேதி மற்றும் சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.