கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காததால் என்ஜினியரிங் மாணவி தற்கொலை
கோவை: நல்ல மதிப்பெண்கள் வைத்திருந்தும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத சோகத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சொக்கம்புதூரைச் சேர்ந்தவர் காயத்ரி (22). கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் 4ம் ஆண்டு படித்து வந்தார். காயத்ரி நன்றாகப் படிப்பவர். நல்ல மதிப்பெண்கள் வைத்திருந்தார். பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 4வது ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படும். அதன் மூலம் அவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பிரபல நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வந்து நேர்காணல் வைத்து வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்வார்கள். அத்தகைய நேர்காணல் பலவற்றில் கலந்து கொண்டும் காயத்ரிக்கு வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்வாகாதபோது அவர் மனமுடைந்து அழுது கொண்டே வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதெல்லாம் பெற்றோர்கள் அவரை சமாதானப்படுத்தினர். நல்ல மதிப்பெண்கள் வைத்திருந்தும் வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவர் மனதில் இருந்தது.
நேற்று அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சென்றுவிட்டனர். வீட்டில் காயத்ரியும், அவரது சகோதரர்களும் இருந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விடிந்தவுடன் காயத்ரியின் படுக்கையறைக் கதவு திறக்காமலேயே இருந்ததால் அவரது தம்பி அங்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாகத் தொங்கினார். இதைப் பார்த்து அவரது தம்பி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காயத்ரியுடன் படிக்கும் மாணவ-மாணவியர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications