ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விலக பாஜக அரசு நெருக்கடி- அரசு வழக்கறிஞர்
ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் (ஜெயலலிதா-சசிகலாவுக்கு எதிராக) சிறப்பு அரசு வழக்கறிஞராக கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வந்தார்.
தனது வாதத் திறமையால் தான் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பினரை கிடுக்கிப் பிடி போட்டு வந்தார். ஆச்சார்யாவை ஜெயலலிதா வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், ஒருவரே சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகிக்கக் கூடாது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை ஜெயலலிதா வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக பாஜக அரசு நிர்பந்தம் செய்தது. இது ஜெயலலிதாவுக்கு சாதகமாக பாஜக அரசு எடுத்துள்ள முடிவாகவே கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்ட ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கில் அவரே தொடர்ந்து ஆஜராவார்.
அரசு தந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கெளடாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.
தனது ராஜினாமா குறித்து பி.வி.ஆச்சார்யா கூறுகையில், நான் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் அட்வகேட் ஜெனலராகவும் பணியாற்றி வந்தேன். இரு பதவிகளை ஒருவர் வகிக்கக்கூடாது என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யும்படி அரசு கூறியது. அந்த பதவிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நான் நியமிக்கப்பட்டேன். எனவே அதை ராஜினாமா செய்யவில்லை என்றார்.
ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது.
பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல்வர் சதானந்த கெளடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது.
நான் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வருவது தெரிந்தும் கூட, மாநில அரசு எனக்கு அட்வகேட் ஜெனரல் பதவியைத் தந்தது.
இப்போது நெருக்கடி கொடுத்தால் நான் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது.
அரசு அட்வகேட் ஜெனரல் பதவியை விட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பே மேலானது என்று கருதிதான், அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார் ஆச்சாரியா.