இரட்டை குண்டு வெடிப்பில் மூவருக்கு தூக்கு– மும்பை உயர்நீதிமன்றம் உறுதி
மும்பை: மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், மூன்று பேருக்கு "பொடா' நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை யை, மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
மும்பையில் 2002, 2003 ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த. 2002 ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல் குண்டு வெடித்தது. இதனையடுத்து 2003 ஆண்டு ஜூன் 28 ம் தேதி கட்கோபர் ஸ்டேசன் அருகில் இரண்டாவது குண்டு வெடித்தது. மூன்றாவதாக சில மாத இடைவெளியில் கேட் வே ஆப் இந்தியா அருகில் ஜாவேரி பஜார் பகுதியில் 2003 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு, பயங்கரவாத தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளுக்காக ஹனீப், அஷ்ரத் அன்சாரி, நசீர் ஆகிய மூவரும், துபாயில் இதற்கான சதித் திட்டத்தை தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் நசீர் என்பவர், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
மும்பையின் இரண்டு இடங்களிலும், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை, இரண்டு டாக்சிகளில் வைத்ததாக, அஷ்ரத், ஹனீப் சயீது மற்றும் அவரது மனைவி பெமிதா சயீது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தூக்கு உறுதி
இந்த வழக்கில், மூவருக்கும் பொடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி, தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூவரும், மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மும்பை ஐகோர்ட், இந்த வழக்கு மீதான தீர்ப்பை, கடந்தாண்டு நவம்பரில் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் கான்வில்கார், பி.டி.கோட் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன், வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, குற்றச் சதிசெய்தது, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்பீல் செய்யலாம்
மேலும், இவர்கள் மூன்று பேரும், இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முகமது அன்சாரி லதுவாலா, முகமது ஹசன் பாட்டரிவாலா ஆகியோர் மீதான விசாரணை, இந்திய குற்றவியல் சட்ட நடைமுறைகளின்படி நடக்கும் என்றும், இதற்காக இவர்கள் நான்கு வாரங்களுக்குள் விசாரணை கோர்ட்டை அணுகும்படியும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications