மாலத்தீவு: வகீத் அரசில் 7 புதிய அமைச்சர்கள் நியமனம்
இப்புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அஸிமா சாக்கூர், மாலத்தீவு நாட்டின் முதலாவது அரசு தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
இதேபோல் பதவி விலகிய நஷீத்தின் பிரதான எதிரியான முன்னாள் அதிபர் கயூமின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹுசைன் செரீப்பையும் அமைச்சரவையில் வகீத் சேர்த்துக் கொண்டுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
நஷீத் பதவி விலகியதைத் தொடர்ந்து மாலத்தீவு தலைநகர் மாலேயில் முகாமிட்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ராபர்ட் பிளேக், முன்னாள் அதிபர் நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் வகீத் மற்றும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல் இந்தியாவின் சிறப்புத் தூதராக மாலத்தீவு சென்ற வெளியுறவுத் துறை அதிகாரி கணபதியும் இத்தகைய சந்திப்புகளை நடத்தினார்.
இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாலத்தீவில் அனைவரும் ஏற்கக் கூடிய ஒரு அரசாங்கம் இருப்பதையே இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தின.
நஷீத்துக்கு இலங்கையும் பாகிஸ்தானும் ஆதரவளித்து வரும் நிலையில் மாலத்தீவில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கக் கூடிய அரசாங்கம் அமைப்பதையே இந்தியாவும் அமெரிக்காவும் முன்மொழிந்தன.
இதனடிப்படையில் தற்போது புதிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நஷீத் எதிர்ப்பு
புதிய அதிபரான வகீத், தமது அதிபர் பொறுப்பை பறித்த சதியின் பின்னணியில் இருப்பவர் என்று முன்னாள் அதிபர் நஷீத் குற்றம்சாட்டி வருகிறார்.
வகீத் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவோ மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவோ இல்லை என்பதும் நஷீத்தின் கருத்து.
மாலத்தீவில் புதியதாக தேர்தலை நடத்தி ஜனநாயக ரீதியிலான அரசாங்கத்தை அமைக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.