28ம் தேதி எண்ணெய் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்: கேஸ் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு
திண்டுக்கல்: வரும் 28ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் எண்ணெய் நிறுவனங்களின் கேஸ், பாட்லிங் மையங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இதனால் தற்போது உள்ள கேஸ் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எண்ணெய் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், லாரி ஓட்டுநர், கிளீனர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும், பி.எப். பணிக்கொடை வழங்க வேண்டும், சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கேஸ் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனால் கேஸ், பாட்லிங் மையங்களில் கேஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு தற்போது உள்ள கேஸ் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.