தமிழகம் தொழில் வளர்ச்சி பெற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க வேண்டும்: ராம கோபாலன்
வள்ளியூர்: தமிழகம் தொழில் வளர்ச்சி பெற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வள்ளியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையால் குறு, சிறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. எப்போது மின்சாரம் வரும் தொழில் செய்யலாம் என பல தொழிற்சாலைகள் பார்த்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. மின்தட்டுப்பாடு தீர கூடங்குளம் அணுமின் நிலையம் தான் தீர்வு. மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீனிவாசன் குழுவினர் அணுமின் நிலையத்தை பார்வையிட்டனர். ஒரு சில தினங்களில் தங்களது அறிக்கையை சமர்பிக்க உள்ளனர். குஜராத்தில் மின்தட்டுப்பாடு கிடையாது. 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அங்கு இலவசம் என எந்த அரசும் கொடுக்கவில்லை.
ஜப்பான் நாட்டு கம்பெனிகள் தமிழகத்தில் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகி்ன்றன. இது வரவேற்கத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கினால் குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். 3 ரூபாய்க்கு மின்சாரம் வழங்கலாம் என்றார்.