பாவம்.. எப்படி இருந்த ரவி மோகன் இப்படி ஆகிட்டாரே! ஆனால் இதை மாத்திக்கணும்! ரசிகர்கள் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: நடிகர் ரவி மோகன் நேற்று கொடுத்த பேட்டி தான் சோசியல் மீடியாவையே கலங்க வைத்து விட்டது. இதுவரைக்கும் ரவிமோகனை அனைவரும் சந்தோஷமாக, ஜாலியாக பேசும் நபராகத்தான் பார்த்திருக்கிறார்கள் ஆனால் நேற்று அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்துவிட்டது. அவருக்கு பலரும் சோசியல் மீடியாவில் ஆறுதல் கூறிய வருகின்றனர்.
சினிமாவில் நாம ஹீரோவாக பார்க்கும் பலருடைய வாழ்க்கை நிஜ வாழ்க்கையிலும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது என்பது ரவி மோகன் விஷயத்தில் உறுதியாகி இருக்கிறது. ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரவி மோகன், அதன்பிறகு குடும்ப ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங் போன்ற பல வெற்றி படங்கள் மூலம் 'பக்கத்து வீட்டு பையன்' என்ற இமேஜை உருவாக்கினார்.

ரவி மோகன் குடும்ப பிரச்சனை
காமெடி, காதல், குடும்ப உணர்வு என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எளிதாக ரசிகர்களை கவர்ந்தவர். அதனால் தான் தற்போது அவர் எதிர்கொண்டு வரும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் ரசிகர்களுக்கு இன்னும் அதிக வேதனையை தருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ரவி மோகனின் திருமண வாழ்க்கை குறித்த விவகாரங்கள் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன.
மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்கு என இந்த விவகாரம் நீண்டு கொண்டே வருகிறது. இதற்கிடையில் பாடகி கெனிஷாவுடன் அவரது தனிப்பட்ட நட்பு குறித்தும் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் கிளம்பின. அந்த விவாதங்கள் இன்னும் அடங்காத நிலையில், சமீபத்திய பேட்டியில் ரவி மோகன் தன்னுடைய மனவேதனையை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது பலரையும் கலங்க வைத்துள்ளது.

மன அழுத்தத்தில் ரவி மோகன்
குறிப்பாக அவர் பேசிய விதமே ரசிகர்களை அதிகம் பாதித்துள்ளது. சாதாரணமாக பேசும் மனிதர் போல இல்லாமல், மன அழுத்தத்தின் உச்சத்தில் இருப்பது போல அவரது உடல்மொழி இருந்தது. ஏற்கனவே ஒரு மறை தற்கொலை முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு ஹீரோ திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் பலமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் மனிதன் என்பதால் அவருக்கும் வலி இருக்கும்" என்ற உணர்வை இந்த சம்பவம் நினைவூட்டியிருக்கிறது.
மேலும், விவாகரத்து பிரச்சனை முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அவர் கூறியிருப்பதும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவர் தன்னுடைய வேலைகளிலிருந்து முழுமையாக விலகி இருந்தால், அது பிரச்சனையை இன்னும் மோசமாக்கும் என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நடிப்பை விட்டு விலகல்
சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி புதிய முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், இந்த முடிவு சரியானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில், "இந்த நேரத்தில் ரவி மோகனுக்கு தேவை தனிமை இல்லை, ஆதரவு", "வேலையில் பிசியாக இருங்கள்", "குடும்பமும் நண்பர்களும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டு வருகின்றனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
குறிப்பாக குழந்தைகளுடனான உறவு எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தும் அதிகமாக பகிரப்படுகிறது. வாழ்க்கையில் பிரச்சனைகள் யாருக்கும் வரலாம். பிரபலமா, சாதாரண மனிதனா என்பது அதில் வித்தியாசம் இல்லை. ஆனால் அந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வர உதவும் சரியான மனிதர்கள் அருகில் இருப்பது மிக முக்கியம். "ரவி மோகன் மீண்டும் பழைய உற்சாகமான மனிதராக திரும்ப வேண்டும்" என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications