கருங்குரங்கு சிக்கி டிரான்ஸ்பார்மர் வெடித்தது: கோதையாறு பவர்ஹவுஸில் மின் உற்பத்தி நிறுத்தம்
குமரி: கோதையாறு பவர்ஹவுஸ் டிரான்ஸ்பார்மரில் கருங்குரங்கு சிக்கியதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக அங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கோதையாறு மலைப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2 பவர் ஹவுஸ்கள் மூலம் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகள் பழமையான இந்நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பர் கோதையாரில் அணை கட்டி தண்ணீர் தேக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு பயன்படுத்தும் தண்ணீர் ஜெனரேட்டர் மூலம் இயக்கி வீணாக்காமல் லோயர் கோதையாறுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு இத்தண்ணீரை பயன்படுத்தி இரண்டாவது பவர்ஹவுஸ் இயக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிக்கப்படாததால் இரண்டு பவர் ஹவுஸ்களிலும் முழுமையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தது. இரண்டு பவர் ஹவுஸ்களிலும் 40 மெகாவட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு கடந்த சில மாதங்களாக முழுஅளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பர் கோதையாறில் உள்ள பவர் ஹவுசில் உற்பத்தியாகும் மின்சாரம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மாற்றப்பட்டு அங்கிருந்து கயத்தாறுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த டிரான்ஸ்பார்மரில் கருங்குரங்கு ஒன்று விளையாடும்போது மாட்டிக்கொண்டது. இரண்டு மின்கம்பிகளுக்கு இடையே கருங்குரங்கு சிக்கிக் கொண்டதால் டிரான்ஸ்பார்மர் வெடித்து சேதமடைந்தது. இதனால் முதலாவது பவர்ஹவுஸை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாவது பவர்ஹவுஸை இயக்க முடியாததால் லோயர் கோதையாறுக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது பவர்ஹவுஸையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழுமையாக மின் உற்பத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications