முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மூல காரணமான கேரள தொகுதிக்கும் 18ம் தேதி தேர்தல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க மூல காரணமாக கூறப்படும் கேரள மாநிலம் பிரவம் தொகுதியிலும் மார்ச் 18ம் தேதியே இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையை கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் உள்ள அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தீவிரமாக அணுகி வந்தனர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தமிழர்கள் கடைகளை தாக்கி அடிப்பது, தமிழகத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் வேன்களைத் தாக்குவது என அட்டூழியம் செய்து வந்தனர்.
இத்தனை அமளிகளுக்கும் காரணம், அம்மாநிலத்தில் உள்ள பிரவம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ளதால் அதில் வெற்றி பெறுவற்காக அணைப் பிரச்சினையில் கேரள அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த பிரவம் வழியாகத்தான் முல்லைப் பெரியாறு ஆறு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணைய்ம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் சங்கரன்கோவிலைப் போலவே, பிரவம் தொகுதிக்கும் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மிக மிக மெல்லிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்து நடத்தி வருகிறது. அடுத்த இடத்தில் மிக மிக நெருக்கமாக கம்யூனிஸ்ட் கூட்டணி உள்ளது. பிரவம் தொகுதியில் எந்தக் கட்சிக்கு வெற்றி கிடைத்தாலும் அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணி பலம் பெறும் என்பதால் இந்தத் தொகுதியைப் பிடிக்க காங்கிரஸும், இடதுசாரிகளும் படு தீவிரமாக உள்ளன. இதனால்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இந்த இரு கட்சிகளும் தேவையில்லாமல் பெரிதாக்கின என்பது நினைவிருக்கலாம்.