சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 3 பேரின் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 3 பேரின் பதவி காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக டி.மதிவாணன், ஏ.ஆறுமுகசாமி, கே.பி.கே. வாசுகி ஆகிய 3 பேரும் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
நியமிக்கப்பட்டனர். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் 2 ஆண்டுகளில் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவைப்படும் 43 நிரந்தர நீதிபதிகளின் இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது. மேலும் 10 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் உள்ளனர். இதனால் தற்போது நிரந்தர நீதிபதிகளாக யாரையும் நியமிக்க முடியாது.
இதனையடுத்து கூடுதல் நீதிபதிகளாக 2 ஆண்டுகள் பணியாற்றி வரும் டி.மதிவாணன், ஏ.ஆறுமுகசாமி, கே.பி.கே.வாசுகி ஆகியோரின் பதவி காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இன்று (17.2.2012) அவர்களுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.












Click it and Unblock the Notifications