பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி, நலத்திட்ட உதவியுடன் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 28ம் தேதி 20,000 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி வழங்குகிறார்.
தென்சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளின் கூட்டம் அன்பகத்தில் நடந்தது. அதற்கு அவைத் தலைவர் நாதன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் வெல்டிங் மணி, கென்னடி, செல்வி, சுரேஷ்குமார் உள்பட பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
தென்சென்னை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு தி. நகரில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் 60 இளைஞர்கள் ரத்த தானம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 20,000 ஏழை குடும்பங்களுக்கு கட்சியின் தலைவர் கருணாநிதி வழங்குகிறார். இது தவிர 400 பேருக்கு பிரிட்ஜ், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 400 பேருக்கு அரிசி குக்கர், 400 பேருக்கு இஸ்திரி பெட்டி, 4,000 பேருக்கு எவர்சில்வர் வாளி, 3,000 பேருக்கு டிராவல்பேக், 12,000 பேருக்கு ஹாட்பாக்ஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த விழாவுக்கு ஜெ. அன்பழகன் தலைமை தாங்குகிறார். இதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட பல முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அன்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்கு கலை நிகழ்சசியும் நடக்கவிருக்கின்றன.
இது தவிர ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் தாய்சேய் நல மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அன்றை தினம் தென் சென்னையில் உள்ள 85 வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கவும், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளி இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் போன்றவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications