சங்கரன்கோவிலில் அத்தனை அமைச்சர்களையும் குவிப்பதை தடுக்க தேமுதிக கோரிக்கை
சென்னை: சங்கரன்கோவிலில் அனைத்து அமைச்சர்களையும் அதிமுக அரசு குவித்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கும் தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அணையர் குரேஷி மற்றும் பிரவீன்குமாருக்கு தேமுதிக அனுப்பியுள்ள புகார் மனு:
சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்துச்செல்விக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழ்நாடு முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அத்தனை அமைச்சர்களும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து, முடிவு அறிவிக்கப்படும் வரை அரசியல் கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஆனால், ஏறக்குறைய 30 நாட்கள் வரை அமைச்சர்கள் என்ற முறையில் அரசு பணியை ஆற்றாமல் இருப்பார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் மக்களுக்கு பணியாற்ற கடமைப்பட்டவர் ஆவார்கள்.
அமைச்சர்கள் தங்களது அரசு பணியை செய்யாமல் இருப்பதால் மக்களுக்கு மட்டுமல்லாமல் அரசு கஜானாவிற்கும் பெரும் இழப்பு ஏற்படும். அனைத்து அமைச்சர்களும் ,அவர்களுடைய அதிகாரிகளும் ஏறக்குறைய ஒரு மாதம் வரை தங்களது கடமையைச் செய்யாவிட்டால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துவிடும்.
ஒட்டுமொத்த அமைச்சர்களும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அங்கு முகாமிட்டிருப்பது கல்வியறிவு இல்லாத வாக்காளர்களிடம் தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும்.
இது, மோசமான முன் உதாரணமாகி, அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்துவிடும். எனவே, நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, நேர்மையான, சுதந்திரமான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.