நள்ளிரவில் சென்னை ஏர்போர்ட்டில் புகுந்த மேற்கு வங்க வாலிபர் தீவிரவாதியா? போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாதியா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்றிரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முக்கிய பிரமுகர்கள் வரும் 4வது கேட் பகுதியில் அத்துமீறி ஒரு வாலிபர் புகுந்ததை கண்டுபிடித்தனர். அந்த வாலிபர் சுவர் ஏறிக் குதித்து வந்தது தெரிய வந்தது.
அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அந்த நபரை கைது செய்து விசாரித்தார்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் தினேஷ் சோரன்(30) என்பதும், அவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கட்டட வேலை செய்யவே சென்னை வந்ததாக சோரன் தெரிவித்துள்ளார். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் செயல்படுகிறார்.
உண்மையில் சோரன் மனநலம் பாதிக்கப்பட்டவரா, அல்லது தீவிரவாதியா இல்லை விமான நிலையத்தில் கொள்ளையடிக்க வந்தவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது.