தமிழகத்தில் ரூ. 2230 கோடியில் மேலும் 2 நான்கு வழிச் சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்த நான்கு வழிச் சாலைகள், மதுரை - ராமநாதபுரம், தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே அமைகிறது. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 2230 கோடிஆகும்.
டெல்லியில் உள் கட்டமைப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு, ஒடிசா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள நெடுஞ்சாலை, துறைமுகம், ரயில் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில் அமைச்சரவை ஒப்பதல் அளித்த தமிழக சாலைத் திட்டங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 49-ல் ராமநாதபுரம் - மதுரை இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 115.110 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 828.07 கோடி. அதில் ரூ. 145.07 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடத்தில் 30 மாதங்களுக்குள் சாலை அமைத்து முடிக்கவும் 30 ஆண்டுகளுக்குள் சாலை அமைத்து, இயக்கி, ஒப்படைக்கும் அடிப்படையில் (பி.ஓ.டி.), ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்படும். புதிய திட்டம் மூலம், மதுரை, சிலைமான், திருபுவனம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு வழி நெடுஞ்சாலை வசதி கிடைக்கும்.
தேசிய நெடுஞ்சாலை 45-ல் விக்கிரவண்டி - தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 164.22 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,402.50 கோடி. அதில் ரூ. 312.50 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடத்தில் 27 மாதங்களுக்குள் சாலையை அமைத்து முடிக்கவும் 27 ஆண்டுகளுக்குச் சுங்க வரி வசூலித்துக் கொள்ளவும் ஒப்பந்ததாரருக்கு அனுமதி அளிக்கப்படும். சாலையை அமைத்து, இயக்கி, அரசிடம் ஒப்படைக்கும் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு வழி நெடுஞ்சாலை வசதி கிடைக்கும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நான்கு வழிச் சாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு வழிச் சாலைத் திட்டம் இந்தியா முழுவதும் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் உபயோகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications