மறைந்த அமைச்சர் கருப்பசாமி மனைவியிடம் ஆசி வாங்கும் வேட்பாளர்கள்!

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா தோற்றபோது கூட வெற்றி பெற்றவர் கருப்பசாமி. அவர் மறைவைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் இரண்டாவது மனைவியின் மகள் முத்துசெல்வி என்பவரும், தி்முக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகன் ஜவகர் சூரியகுமார் உள்பட 13 பேர் களத்தில் உள்ளனர்.
முதன்முதலில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து அக்கட்சி வேட்பாளர் முத்துசெல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் தங்களை யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதனைத் தெடர்ந்து அதி்முகவின் முக்கிய புள்ளிகள் அவரது வீட்டை நோக்கி படையெடுத்தனர். வேட்பாளர் முத்துசெல்வி கருப்பசாமியின் மனைவியிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் அவரது வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
தொடர்ந்து இத்தொகுதியில் 4 முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்று 2 முறை அமைச்சராக இருந்து கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் மறைந்த கருப்பசாமியை மறந்து அதிமுகவினர் அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் குறையாக பேசப்பட்டது. தற்போது காலம் கடந்த நிலையில் தேர்தலுக்காக 15 தினங்களே உள்ள நிலையில் கருப்பசாமி குடும்பத்தினரை போய் அதிமுகவினர் சந்தித்தது தொண்டர்கள் மத்தியில் நிம்மதியை கொடுத்துள்ளது.
மறைந்த அமைச்சர் குடும்பத்தினர் மீது அதிமுக புள்ளிகளுக்கு திடீர் பரிவு வரக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சங்கரன்கோவிலில் பேசப்படுகிறது.
கருப்பசாமியின் மறைவுக்கு பின் புறக்கணிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை திமுகவின் முக்கிய புள்ளி சந்தித்து ஆதரவு கேட்டு உள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் தான் இதற்கு காரணமாம். மேலும் கருப்பசாமி மீது ஊழல் புகார் முதல் சின்ன குற்றங்கள் கூட தொகுதியில் ஏற்பட்டதில்லை. அந்த அளவுக்கு நற்பெயர் பெறறவர் என்பதாலும், அவர் குடும்பத்திற்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளதாலும் அந்த நற்பெயர் வாக்கு வங்கி திசை மாறி சென்று விடக்கூடாது என்பதால் தான் அதிமுகவின் திடீர் விசிட் அடித்துள்ளனராம்.
எது எப்படியோ கருப்பசாமியை மறந்தவர்களை அவரது ஆன்மா மன்னிக்காது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications