ரூ.6 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்- இடைத்தேர்தலில் விநியோகிக்க திட்டமா?
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்காசியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பிடிப்பட்டுள்ளது. கள்ளநோட்டுகளை இடைத்தேர்தலின் வாக்காளர்களுக்கு அளிக்க கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க சங்கரன்கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையத்தை அடுத்த சுந்தரபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(46) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் வைத்திருந்த பையில் ரூ.1,000 நோட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது மோட்டர் சைக்கிளின் பெட்டியை சோதனையிட்டனர். அதில் ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டுகளாக வைக்கப்பட்டு இருந்தது. ரூபாய் நோட்டுகளை சோதனையிட்ட போது, அவை அனைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார், கள்ள நோட்டுகள் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென்காசியில் பிடிப்பட்ட கள்ளநோட்டுகள் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications