வெளிமாநில மாணவர்கள் யார்?: பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கிப் படிக்கும் வெளிமாநில மாநில மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கல்லூரிகளுக்கு தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை-கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தற்போது வடமாநில இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் அவர்களை பற்றிய முழு விவரங்களையும் போலீசார் பட்டியல் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த 2 வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 வட மாநில வாலிபர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
திருப்பூர் நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் ஜார்க்கண்ட் மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தங்குவதற்கு சென்னை சேலையூர் பகுதியில் வாடகை வீட்டை அனுமதித்ததும் வடமாநில மாணவர்கள்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில இளைஞர்கள் நிறைய பேர் ஆங்காங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களில் பலர் கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்த ஊருக்கு செல்லாமல் இங்கேயே தங்கி விடுகின்றனர்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதால் சிலர் அந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு வடமாநில மாணவர்கள் யார்-யார் ஹாஸ்டலுக்கு வெளியே தங்கி படிக்கிறார்கள் என்பதை பட்டியல் எடுத்து தருமாறு உயர்கல்வித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புதுறை, பொதுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாணவர்கள் தொடர்பாக தேவையான விவரங்களை கல்லூரிகளில் கேட்டு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் அனைத்து கல்லூரிகளிலும் படிக்கும் வெளிமாநில மாணவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கி இருக்கும் இடம், அங்கு யார்-யார் உள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications