உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராது: ராஜ்நாத் சிங்
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அங்கு பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கடந்த 3ம் தேதி தான் முடிந்தது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு பாஜக ஆட்சிக்கு வராது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
உத்தரபிரதேசத்தில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது. நாங்கள் நிச்சயமாக பல இடங்களை கைப்பற்றுவோம். ஆனால் ஆட்சியமைக்கும் அளவுக்கு எங்களிடம் பெரும்பான்மை இருக்காது. பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி பாஜக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருக்கிறது.
மாநிலத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது பாஜகவுக்கு நல்லதாகவே அமையும். சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே, ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் செய்த பிரச்சாரத்தின் விளைவாகத் தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications