உதயக்குமார் மனைவி நடத்தி வரும் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் திடீர் இடிப்பு
நாகர்கோவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமாரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை சிலர் இடித்து விட்டனர். இதுகுறித்துப் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
உதயக்குமாரின் போராட்டத்தால்தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து கிளம்பியுள்ளதால், அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகின்றன.
இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவருடைய மனைவி மீரா ஆகியோர் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ இடித்து தள்ளிவிட்டனர். இந்த பள்ளிக்கூடம் நாகர்கோவில் அருகே பழவிளையில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவர் சிமென்ட் கற்களால் கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு சுவரில் 50 அடி நீளத்திற்கு இடித்து விட்டனர். தகவல் அறிந்ததும் உதயக்குமாரின் மனைவி மீரா விரைந்து சென்று இடிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் ராஜாக்கமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில் சில இந்து அமைப்புகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications