மனைவியை மாடியில் இருந்து தள்ளிய கூடங்குளம் அணுமின்நிலைய டெக்னீசியனுக்கு 10 ஆண்டு சிறை
நெல்லை: மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிய கூடங்குளம் அணுமின் நிலைய டெக்னீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சிவகிரி அருகேயுள்ள ராயகிரியைச் சேர்ந்தவர் தர்மர் மகன் வீமராஜா. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். அவரும், கூடங்குளத்தைச் சேர்ந்த ராணி என்பவரும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வீமராஜா மனைவி, மகனுடன் கூடங்குளம் அணுவிஜய் நகரியத்தில் வசித்து வந்தார். ராணி அங்குள்ள வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி ராணி தனது வீட்டின் பால்கனியில் நின்றார். அப்போது வீமராஜா கத்திரிக்கோலை வைத்து மனைவியின் தலைமுடியை வெட்ட முயன்றார். அதை தடுத்தபோது கத்திரிக்கோலால் ராணியின் கையிலும், நெற்றியிலும் குத்தினார்.
இதையடுத்து மனைவியை அவர் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் ராணி பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இது குறித்து ராணி கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வீமராஜா, அவரது சகோதரி நெல்லை டவுனைச் சேர்ந்த விஜயா(38), அத்தான் வீரமணி(42) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவசகாயம் குற்றம் சாட்டப்பட்ட வீமராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications