தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்க திட்டம்
திருப்பதி: தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலைச் சுற்றி ரூ. 3.80 கோடி செலவில் இரும்பு வேலி அமைக்க முடிவு செய்திருப்பதாக திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டில் உள்ள முக்கிய புனிதத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு மத்திய உளவுத் துறையினர் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங், திருப்பதி புறநகர் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு எல்.வி.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் மத்திய உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோவிலைச் சுற்றி உள்ள 4 மாடவீதிகளிலும் இரும்பினாலான வேலி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் திருமலையின் 4 மாடவீதிகள் மட்டுமின்றி வனப்பகுதியிலும் இரும்பு வேலி அமைக்கப்படும். வரும் பிரம்மோற்சவ விழாவிற்குள் இரும்பு வேலி அமைக்கும் பணி நிறைவடையும்.
இரும்பு வேலியின் நடுவே 7 இடங்களில் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக வழி (சப்த துவாரங்கள்) அமைக்கப்படும். இந்த 7 வழிகளிலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறியும் மெட்டல் டிடக்டர்' கருவிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.
மேலும் 4 மாடவீதிகளின் ஒவ்வொரு மூலையிலும் அவசர கால கதவுகள் அமைக்கப்படும். இரும்பு வேலியினால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications