விசாரணையில் மரணமடைந்த மேற்கு வங்க போலீஸ் உளவாளி-4 திருப்பூர் போலீஸார் மீது வழக்கு!
திருப்பூர்: திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை குறித்து தமிழக போலீஸ் படைக்குத் துப்பு கொடுத்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் திடீரென மரணமடைந்தார். இதனால் அங்குள்ளவர்கள் தமிழக போலீஸாரை பிடித்துக் கொண்டனர். இதையடுத்து மேற்கு வங்க போலீஸார், தமிழக போலீஸார் நான்கு பேரைக் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் நிறுத்தப்பட்ட நான்கு பேரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைக் கடையையே காலி செய்து விட்டு நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பினர். இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் என்பவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது.
அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் போலீசில் சிக்கினார்கள்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வங்கதேசத்திற்கு கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதாகவும தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஷேக், 2 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது உடலை கால்வாய் அருகே கண்டுபிடித்தனர். இது கொலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழக போலீஸாரின் விசாரணையின்போதுதான் ஷேக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக போலீஸாரை பிடித்துக் கொண்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் கோவையில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து டிஐஜி ஜெயராம் விரைந்து சென்றார். அங்கு உள்ளூர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் தமிழக தனிப்படையினர் மீட்கப்பட்டனர்.
இருப்பினும் நான்கு தமிழக போலீஸாரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நான்கு போலீஸாருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஷேக் இறந்து விட்டதால் மேற்கொண்டு தகவல்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசாரணை தேக்கமடைந்துள்ளது. மேலும் வழக்கும் பாய்ந்துள்ளதால், கையில் சிக்கிய 3 கொள்ளையர்களுடன் திருப்பூர் திரும்ப தனிப்படை போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications