தாலி கட்டிய கையோடு மனைவியுடன் ஓட்டு போட வந்த வாலிபர்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே மக்கள் அதிக ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பகல் 12.00 மணி நிலவரப்படி 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை வாக்குப்பதிவு எந்தவித பிரச்சனையும் இன்றி அமைதியாக நடந்து வருகிறது. அத்திப்பட்டி கிராமத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்க்கப்பட்டது.
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. அவருக்கும் சங்கரகோமதி என்பவருக்கும் இன்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதால் அவர்கள் இருவரும் மாலையும், கழுத்துமாக மணக் கோலத்தில் சங்கரன்கோவில் வணிக வைசிய நடுநிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
மணக்கோலத்தில் வந்த அவர்களைப் பார்த்து மற்ற வாக்காளர்கள் வியப்படைந்தனர். வாக்களித்த பிறகு அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.