புதுச்சேரியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம் !
புதுச்சேரி: புதுச்சேரி, லிங்காரெட்டியார்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் புதுச்சேரி சட்டமன்றம் அருகே போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் லிங்காரெட்டியார்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பழுதை நீக்கி உடனே திறக்க வேண்டும். கூட்டுறவு ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு உடனே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். 2010-11ம் ஆண்டு வங்கிக்கு செலுத்த விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்த ரூ.2.5 கோடியையும், அதற்கான வட்டியை சேர்த்து வங்கிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் புதுச்சேரி சட்டமன்றம் அருகே போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பிரதேச தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். சங்கத்தின் ஒருங்கினைப்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ராமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், சரவணன், சுப்புரமணி, ராம மூர்த்தி, குப்புசாமி, மோகன் குமார், அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.