தமிழகத்தில் ரூ.3,113 கோடிக்கு பயிர்க்கடன்கள் - அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.3,113 கோடி அளவுக்கு குறுகிய கால பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு குறுகியகால பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் இதுவரை ரூ.3,113 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கடன்களை பெற்ற விவசாயிகள் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தியதன் மூலம் மட்டும் 5,78,494 விவசாயிகள் அரசு மானியமாக ரூ.115.40 கோடி அளவிற்கு வட்டிச் சலுகை பெற்று பயன்பெற்றுள்ளனர்.
மேலும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் நடப்பாண்டில் நகைக்கடனாக ரூ.1,000 கோடி அளவிற்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை ரூ.752.80 கோடி அளவிற்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.500 கோடி அளவிற்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.409.04 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகளை ரூ.12 முதல் ரூ.16 வரை தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெற்று பயன்பெறுகின்றனர்.
அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வைப்பீட்டினை அதிகரிக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக தற்பொழுது மொத்த வைப்பீடு ரூ.29,978 கோடி அளவிற்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கிடவும், கட்டுப்பாடற்ற பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் விற்பனை செய்திடவேண்டும் என தெரிவித்ததோடு, நியாயவிலைக் கடைகளில் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.