ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே நாளில் 118 கேள்விகளுக்கு பதிலளித்த சசி!

முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார். இதுவரை 386 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக வாக்குமூலம் அளிக்க நேற்று காலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். காலை 11 மணியளவில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவும், சசிகலா தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கரும் ஆஜராகினர்.
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு டீ' எஸ்டேட் ரூ.3.45 கோடிக்கு வாங்கியது, ரூ.1.50 கோடிக்கு டான்சி நிலம் வாங்கியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, அது உண்மை தான் என்று சசிகலா பதில் கூறினார்.
சுதாகரன் திருமண செலவு
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ரூ.5.91 கோடி செலவு செய்து குறித்து கேட்டபோது, பெண் வீட்டார் அந்த பணத்தை செலவு செய்ததாக சசிகலா பதில் சொன்னார்.
நடராஜன் சொத்து
சசிகலாவின் கணவர் நடராஜன் பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள் குறித்தும், சசிகலாவின் சித்தப்பா, அத்தை உள்பட உறவினர்களின் பூர்வீக சொத்துகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு ஆம், இல்லை என்றே சசிகலா பதில் கூறினார்.
மேலும் மிடாஸ் ஆக்ரோ பார்ம், ரிவர்வே, ராம்ராஜ் ஆக்ரோ பார்ம் ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கப்பட்ட சொத்துகள், வங்கி கணக்குகள் உள்பட மொத்தம் கேட்கப்பட்ட 118 கேள்விகளுக்கு சசிகலா நேற்று பதில் அளித்தார்.
இதனை தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணியை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் இதுவரை 504 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications