தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்கப்படலாம்..பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி 'பேக்ஸ்'

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இதனால் இலங்கையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
இந்த நிலையில் இந்தியா ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்,
ராஜபக்சே அரசால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா ஆதரவு அளித்தமைக்கு நான் மிக மகிழ்ச்சி அடைவதுடன் தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக இந்திய அரசுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் நன்றி கூறுவார்கள்.
ஐ.நா. கவுன்சில் தீர்மானத்தை அடுத்து தங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கைத் தமிழர்களிடையே பரவலான அச்சம் நிலவுவதை இங்கு வரும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. தங்களது தூதரக வழிகள் மூலமாக இத்தகைய விரும்பத்தகாத போக்குகள் அனைத்தையும் தயவு செய்து தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications