ஒரிசா: ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கடத்திச் சென்றனர் மாவோயிஸ்டுகள்

கோராபுட் மாவட்டம் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜினா ஹிகாகா கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு கலந்து கொண்டார். அதன் பின்னர் இரவு 9.15 மணியளவில் கோரபுட் எம்.எல்.ஏ. ரகுராமுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து புறப்பட்டு செமிலிகுடா என்ற இடத்தில் இரவு உணவு அருந்திவிட்டு லக்ஷ்மிபூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது டோயபுட் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்த 100 மாவோயிஸ்டுகள் எம்.எல்.ஏ. சென்ற வாகனத்தை திடீர் என வழிமறித்துள்ளனர். பாதுகாவலரையும், ஓட்டுநரையும் தப்பிச்செல்ல அனுமதித்துவிட்டு, எம்.எல்.ஏ.வை மட்டும் அவர்கள் கடத்திச் சென்றதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்பதற்கு ஒரிசா காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டுள்ள ஜினா ஹிகாகா, கோயா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கோயா பழங்குடி இனத்தில் படித்த ஒரே ஒருவர் ஜினா ஹிகாகா மட்டுமே.
சில நாட்களுக்கு முன்பு கோரபுட் மாவட்டம் ஹரிபுட் என்ற இடத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை சந்தை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
ஏற்கெனவே இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளை கந்தமால்- கஞ்சம் மாவட்டங்களின் எல்லையில் மாவோயிஸ்டுகள் முன்பு கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கடத்தியுள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications