புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

கடந்த கருணாநிதி ஆட்சியின்போது தலைமைச் செயலாளராக திறம்பட செயலாற்றியவர் மாலதி. 1977ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி மாலதி. தமிழக அரசின் 39வது தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பதவிய வகித்த 2வது பெண் அதிகாரியும் இவர்தான்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவரான மாலதி, திருச்சியில், 1978ம் ஆண்டு துணை கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக 1987ல் பதவி வகித்தார்.
பிறகு வட ஆற்காடு மாவட்ட ஆட்சியர், விவசாயத்துறை, நிதித்துறை, நீர்வளத்துறை செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
2007ம் ஆண்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். பிறகு தனது ஓய்வுக்கு முன்பாக தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். புற்றுநோய் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தனக்கு அரசு கொடுத்த பணியை திறம்பட செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். அதிவேகமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்.
நோய் பாதிப்பு முற்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதியின் உயிர் இன்றுகாலை பிரிந்தது.












Click it and Unblock the Notifications