சேது சமுத்திரத் திட்டம்: உறுதியுடன் நடந்து கொள்ளுமாறு சோனியாவிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை

மேலும் பிரதமர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பியவுடன் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து சேது சமுத்திர திட்டம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் அது தமிழக மக்களுக்கு தரப்பட்ட உறுதிமொழிக்கும் நம்பிக்கைக்கும் துரோகம் செய்வதாகவே அமையும்.
தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் பெரும் ஊக்கமாக அமையும். இந்தத் திட்டத்தை கைவிடும் மத்திய அரசின் எந்த முடிவும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்கும்.
கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இந்தத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசிய சோனியா காந்தி, இந்தத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்ததையும் இங்கே நினைவூட்டுகிறோம்.
அந்தத் திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து வெறும் 22 கி.மீ. ஆழப்படுத்துதல் பணி மட்டுமே மிச்சம் உள்ளது.
இந்தத் திட்டத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டுவிட்டதை மனதில் கொண்டு, இந்த வழக்கை விரைந்து நடத்தி முடிக்க முயற்சி மேற்கொண்டு, தமிழக மக்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய இணையமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செ.காந்திசெல்வன் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், டி.வேணுகோபால், ஆதி.சங்கர், இரா.தாமரைச்செல்வன், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஜே.ஹெலன் டேவிட்சன், கனிமொழி, திருச்சி என்.சிவா, அ.அ.ஜின்னா, திருமதி வசந்தி ஸ்டேன்லி, கே.பி. இராமலிங்கம், ச.தங்கவேலு ஆகியோர் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதே கோரிக்கை அடங்கிய மனுவினை பிரதமர் அலுவலகத்தில் மன்மோகன் சிங் சார்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பெற்றுக் கொண்டார்.
இது குறித்து திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் இந்தக் கோரிக்கை குறித்து நேரில் சந்தித்துப் பேசுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications