ரித்தீஷ் எம்.பி. சொல்லியே திமுக நிர்வாகியை கடத்தினோம்: வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரைக் கடத்திய கும்பலைப் பிடிக்க திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றனர். அங்கு கூலிப்படையைச் சேர்ந்த கேரள வாலிபர் சினோஜ்(32) என்பவர் போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் பலியானார். அப்போது அங்கிருந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் சிக்கினர். செல்வத்தின் தம்பி செந்தில்(32) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்தீஷ் உள்பட மேலும் சிலரின் பெயர்களும் சேர்ககப்பட்டன.
இந்நிலையில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் வாக்குமூலத்தை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது,
என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனக்கும், ரித்தீஷ் எம்.பி.க்கும் நல்ல பழக்கம் உள்ளது. ரித்தீஷ் எம்.பி.யின் நண்பர் சுரேஷ் என்னை சென்னைக்கு வரும்படி கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சென்னை, பாண்டிபஜாரில் ஒரு லாட்ஜில் அவரை சந்தித்தேன்.
அப்போது ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளராக இருந்த போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் தற்போது முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளராக செயல்படுவதால் எம்.பி. மிகுந்த வருத்தமாக உள்ளதாக கூறினார். அதனால் கதிரவனை கடத்தி, மிரட்டி அவரிடம் பணத்தை பறித்துக்கொண்டு விட்டுவிடும்படி என்னிடம் எம்.பி. கூறச் சொன்னதாக சுரேஷ் கூறினார்.
அதன்படி நானும், கேரளாவில் சாராயம் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த சினோஜ், அஜீத், வர்கீஸ், அனிஸ், என் தம்பி செந்திலின் நண்பர்கள் கண்ணன், கமலக்கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து அவரை கடத்த திட்டம் தீட்டினோம்.
நான் கூறியதுபோல் சினோஜ், அஜீத் உள்பட சிலர் அவரை கடத்தி கொடைக்கானல் அழைத்துச் சென்று மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த தங்க மோதிரம், ரூ.48,000 பணம், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விடுவித்தனர். அவற்றை என்னிடம் கொடுத்தனர். நான் பணத்தை அவர்களுக்கே பிரித்துக்கொடுத்துவிட்டேன். ஏ.டி.எம். கார்டுகளை எரித்துவிட்டேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செல்வத்தை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில் போலீசார் மற்றொரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கதிரவனை கடத்தி மிரட்டும்படி, ரித்தீஷ் எம்.பி. கூறியதாக சுரேஷ் என்னிடம் கூறினார். நான் உடனடியாக எம்.பி.யை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை நேரடியாக ஏன் என்னிடம் கூறவில்லை என்று கேட்டேன். அதற்கு உனக்கே வேதனையாக உள்ளதே, அதுபோலத்தான் எனக்கும் இருந்தது என்று கூறிய எம்.பி. கதிரவனின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் கடத்தி மிரட்டினால் போதும் என்று கூறினார். அதன்படி நாங்கள் செயல்பட்டோம் என்றோம் என்று புதிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications