புதுக்கோட்டை எம்.எல்.ஏ மரணம்- அஞ்சலிக்குப் பின் நாளை சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து நாளை, சட்டசபையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இன்று காலை அன்னவாசல் பகுதியில் மரணம் அடைந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பழனிச்சாமி என்பவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசலுக்கு காரில் சென்றார்.
அன்னவாசலை அடுத்து சொக்கநாதன்பட்டி அருகே ஆரியூர் என்ற இடத்தில் கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. டிரைவர் காரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இறுதியில் அந்த கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி முத்துக்குமரன் எம்.எல்.ஏ. பரிதாபமாக இறந்தார்.
எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் பலியானதை தொடர்ந்து நாளை காலை சட்டசபை கூடியதும் அவருக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு சட்டசபை அன்று ஒத்தி வைக்கப்பட்டு மறுநாள் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications