2ஜி லைசென்ஸ் ரத்து: மத்திய அரசு, டெலிகாம் நிறுவனங்கள், சாமியின் மனுக்கள் மீது இன்று விசாரணை

திமுகவைச் சேர்ந்த ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 9 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய 122 லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ரத்து செய்தது.
ஜூன் 2ம் தேதியோடு இந்த லைசென்ஸ்கள் காலாவதியாகிவிடும் என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அறிவித்தது.
இதில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.
இந்த லைசென்ஸ்களை மூன்று மாதங்களுக்குள் மறு ஏலம் விடவும், அதற்குள் ஏலம் விடுவதற்கான புதிய விதிமுறைகளை வகுக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பையடுத்து மத்திய அரசு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ராசா மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, Centre for Public Interest Litigation என்ற என்ஜிஓ ஆகியோர் சார்பில் பல பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், 122 2ஜி லைசென்ஸ்களை மறு ஏலம் விட கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் உள்ளிட்ட அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு முன்பே அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோர முடியும் என்றும், ராசா விஷயத்தில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி தராமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்தது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததிருந்ததை எதிர்த்தும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
டாடா, சிஸ்டமா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சேர்க்க மறுத்ததை எதிர்த்து சாமியும் என்ஜிஓவும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்சில் இருந்த நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்குப் பதிலாக நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த பெஞ்சில் இடம் பெற்றுள்ளார். இன்று இந்த பெஞ்ச் முன் 2ஜி வழக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications