எஸ்எஸ் மியூசிக் டிவி-லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு: ஜெயிலேயே கைது
கோவை: லாட்டரி அதிபரும் எஸ்எஸ் மியூசிக் டிவி சேனல் அதிபருமான மார்ட்டின் மீது இன்னொரு நில மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டின். இவர் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதன்மூலம் அரசு அதிகாரிகளின் வட்டாரத்தை சாதகமாக பயன்படுத்தி பெரும் பயன் அடைந்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நில மோசடி வழக்கு தொடர்பாக மார்ட்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் பல வழக்குகள் பாய்ந்தன.
இந் நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கோவை கலெக்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். ஆனால். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந் நிலையில் கோவை அருகே எலச்சிப்பாளையத்தை சேர்ந்த சென்னியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மார்ட்டின் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னியப்பன் கொடுத்த புகாரில், எனக்கு எலச்சிப்பாளையத்தில் 5.41 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை கடந்த 2006ம் ஆண்டு கோவையை சேர்ந்த மார்ட்டினும், கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்த நடராஜன், ராமசாமி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து விட்டனர். திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்ய முயற்சி செய்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்ட்டினை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட் இந்திராணி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்ட்டின் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மார்ட்டின் தான் பிரபலமான தென் இந்திய இசை சேனலான எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியின் உரிமையாளர் ஆவார்.












Click it and Unblock the Notifications