அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளராக வைகைசெல்வன் நியமனம்
மதுரை: அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளராக டாக்டர் வைகைச் செல்வனை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அஇஅதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் வைகைச் செல்வன் எம்.எல்.ஏ இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகின்றார் என்று கூறியுள்ளார்.
சிறந்த பேச்சாளர்
அருப்புக்கோட்டை எம்.எல்.ஏவாக இருக்கிறார் டாக்டர் வைகைச் செல்வன். சிறந்த பேச்சாளரான இவர் நல்ல எழுத்தாளரும் கூட. இலக்கிய அணிச் செயலாளராக திறம்பட பணியாற்றி வந்த நிலையில் தற்போது அதிமுகவின் முக்கியப் பொறுப்பு தேடி வந்திருப்பது கட்சித் தலைமைக்கு இவர் காட்டிய விசுவாசம் மட்டுமல்லாமல் திறமைக்கும் கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.
பெரிய கதை...
ஜெயலலிதாவால் அதிமுகவில் உருவாக்கப்பட்டதே இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை. இந்தப் புதிய பிரிவும், அதற்கான மாநிலச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டதே சசிகலா குடும்பத்துக்காகத்தான் என்று கூறப்பட்டது.
பாசறையின் முதல் செயலாளராக சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். இவர் டிடிவி தினகரனின் தங்கச்சியை கல்யாணம் முடித்தவர்.
அதிமுகவில் இந்த வெங்கடேஷ் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி ஒரு ஆட்டம் போட்டார். கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவிலிருந்து தூக்கப்பட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்களில் வெங்கடேஷும் ஒருவர்.
அவரைத் தூக்கிய பின்னர் எம்.எல்.ஏ. வி.பி. கலைராஜன் வசம் இந்தப் பொறுப்பு போனது. ஆனால் அவரும் மன்னார்குடி வகையறாவுக்கு நெருக்கமானவர் என்று தெரிய வந்ததால் அவரைத் தூக்கி விட்டு கரூரைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு மாநிலச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா.
ஆனால் அவருக்கு ராவணனுடன் தொடர்பு உள்ளதாக யாரோ போட்டுக் கொடுத்து விட்டதால், செந்தில்நாதன் பதவியையும் பறித்தார் ஜெயலலிதா. ஆனால் எனக்கும் ராவணனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, ஏன் இப்படிச் செய்தார் அம்மா என்று செந்தில்நாதன் புலம்பினார்.












Click it and Unblock the Notifications