கூடுதல் வரி விதிப்பு: தங்க நகை வியாபாரிகளுடன் பிரணாப் முகர்ஜி நாளை பேச்சுவார்த்தை
நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வர்த்தக பெயர் இல்லாத தங்க நகைகளுக்கு 1 சதவீத உற்பத்தி வரி, இறக்குமதி தங்கத்தின் மீது கூடுதல் வரி, 1 சதவீத சுங்கவரி, ரூ.2 லட்சத்திற்கு மேல் தங்க நகைகள் வாங்கினால் 1 சதீவதம் கூடுதல் விற்பனை வரி ஆகியவற்றை விதித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள தங்க நகைக்கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் 1 வாரத்திற்கு தங்க நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒன்றும் நடக்காது என்று சொல்லி வந்த பிரணாப் முகர்ஜி போராட்டம் தீவிரமடைவதை தற்போது தான் உணர்ந்துள்ளார். இதையடுத்து தங்க நகை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் அவர் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த தகவலை மத்திய உற்பத்தி மற்றும் கலால் வரி வாரியத்தின் தலைவர் எஸ்.கே.கோயல் தெரிவித்துள்ளார்.