அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது அரசியல் வருகையை நடிகர் ராகவா லாரன்ஸ் வரவேற்றுள்ளார். அண்ணாமலை அரசியல் புரிதல் கொண்டவர் என்றும், புதிய நபர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்ல விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், "அண்ணாமலை அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

அண்ணாமலை உள்பட யார் வேண்டும் என்றாலும், அரசியலுக்கு வரலாம். அண்ணாமலை சிறைந்த அரசியல் புரிதல் கொண்டவர். புதுப்புது ஆட்கள் வருவது நல்லதுதான். ரஜினிகாந்த் ஆல்தி பெஸ்ட் என்று என்னிடம் சொன்னார். எனது முடிவை தெரிவித்த பிறகு எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்க செல்வேன்" என்றார்.
நான் வரலாமா? வேண்டாமா?
ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை பற்றி கடந்த 12 ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்த ராகவா லாரன்ஸ், நான் வரலாமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்து சொல்லுங்கள் என்றும் கூறியிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், "என் தாய்க்கு நிகராக நினைக்கும் என்னுடைய ரசிகர்களை பார்த்து கேட்கிறேன். மக்களிடமும் கேட்கிறேன்.
நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுவரை என்னால் முடிந்தளவு மக்களுக்காக உதவி செய்துள்ளேன். நான் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா? உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். மக்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையுடன் சேருகிறாரா?
ராகவா லாரன்ஸ் விஜய்யின் தவெகவில் இணைவார் என்றும், அண்ணாமலை இயக்கத்தில் சேருவார் என்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளார். அவரது இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் சேரக்கூடும் என்று ஒரு தரப்பினர் வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று செய்தியாளர் சந்திப்பில் தவெக அரசை பாராட்டி பேசிய ராகவா லாரன்ஸ், அண்ணாமலையும் அரசியல் புரிதல் கொண்டவர் என்று விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார். விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறினாரே தவிர.. தனது அரசியல் பயணம் யாருடன் என்பது குறித்து இன்றும் தெளிவான நிலைப்பாட்டை கூறாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications