இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் அதிமுகவின் ரபி பெர்னார்ட்!

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், ஏப்ரல் 16ம் தேதி இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்கிறது. தமிழர் பகுதிகளை இக்குழு பார்வையிடவுள்ளது. இக்குழுவினர் 25ம் தேதி வரை இலங்கையில் இருப்பார்கள்.
இக்குழுவில் பாஜக சார்பில் சுஷ்மா தவிர வெங்கையா நாயுடு இடம் பெறுகிறார். அதேபோல திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், கிருஷ்ணசாமி ஆகியோர் இடம் பெறுகிறார்கள். இவர்கள் தவிர வட இந்திய எம்.பிக்கள் சிலரும் இடம் பெறுகின்றனர்.
ஆனால் மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இக்குழுவில் சேர்க்கவில்லை மத்திய அரசு. இலங்கையின் நிர்ப்பந்தம் மற்றும் நிபந்தனை காரணமாகவே இவர்களை மத்திய அரசு குழுவில் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல அதிமுகவும் இக்குழுவில் இடம் பெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. காரணம், ராஜபக்சே அரசுக்கு எதிராக தீவிரமான போக்கில் இருந்து வருபவர் ஜெயலலிதா என்பதால் அக்கட்சி சார்பில் பிரதிநிதி செல்வாரா என்பது குழப்பமாகவே இருந்தது.
ஆனால் தற்போது அதிமுக சார்பில் ரபி பெர்னார்ட் செல்வார் என்று கூறப்படுகிறது. ரபி பெர்னார்ட் பங்கேற்பது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்திற்கு அதிமுக தலைமை ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
சிபிஐக்கு அழைப்பு அனுப்பப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு. அக்கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications