மோடியை கிருஷ்ணராக சித்தரிப்பதா? காங்கிரஸ் கண்டனம்
ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் பத்திரிக்கை விளம்பரம் ஒன்றில் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை கிருஷ்ணராக சித்தரித்து விளம்பரம் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் விளம்பர யுக்தி என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நரேந்திர மோடியை கிருஷ்ணராகவும், மாநில பா.ஜ.க தலைவர் ஆர்.சி.பால்டு அர்ஜுனராகவும், சித்தரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று குஜராத் மாநில நாளிதல் ஒன்றில் வெளியானது. அம்ரேலி மாவட்ட பா.ஜனதா தலைவர் பாரத் காம்தார், இந்த விளம்பரத்தினை கொடுத்து இருந்தார். இந்த விளம்பரத்தில் சில தலைவர்கள் பாண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இதுபோன்ற ஸ்டண்ட் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருதாக, குஜராத் காங்கிரஸ் தலைவரான நரஹரி அமீன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திரமோடி, மக்களை முட்டாளாக்கி வருகிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மோடி, அடுத்து ராமர், ரஹீம் போன்ற அவதாரங்களையும் அவர் எடுப்பார் என்றும், அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரசின் இந்த விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள மாநில நிதி அமைச்சர் வாஜூபாய் வாலா, மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவதில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் நரேந்திர மோடி மக்களுக்கு நன்மை தரும் பல செயல்களை செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications