பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: தமிழ்நாட்டில் 29 பேர் அனுமதி – சுகாதார அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து 260க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனேயில் இருந்து 8 அண்டை மாநிலங்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. தற்போது தமிழ்நாடு, ஆந்திராவிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சென்னையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் 75 வயதுடைய பெரியவர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கால்டாக்ஸி டிரைவர் ரமேஷ் (வயது 22) என்ற இளைஞர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ரயில் நிலையங்கள், விமானநிலையங்களிலும், மாநிலத்தின் எல்லைப்பகுதிகளிலும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜய் கூறினார்.












Click it and Unblock the Notifications