சுற்றுச்சூழலை அழிக்கும் பாதரச கழிவுகள்! - இயற்கை ஆர்வலர்கள் அச்சம்

கொடைக்கானலில் கடந்த 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பாதரச தர்மாமீட்டர் தொழிற்சாலை தன்னுடைய தொழிற்சாலை கழிவுகளை நகர்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொட்டியது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தை அமெரிக்காவில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தர்மாமீட்டர் தயாரிக்க மிகக் குறைந்த வெப்பநிலை தேவையென்பதால், கொடைக்கானல் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டு, தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. பின்னர் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து படிப்படியான மக்கள் போராட்டங்களால் இந்நிறுவனத்தை 2001 ம் ஆண்டு இழுத்து மூட அரசு உத்திரவிட்டது.
பாதாரச கழிவுகள்
பதினேழு ஆண்டுகள் செயல்பட்ட இந்த தொழிற்சாலையை சுற்றி உள்ளேயும், வெளியேயும் பாதரச கழிவுகள் அதிக அளவில் உள்ளது. இதை தமிழக அரசு உடனே சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதரசத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உடனே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
30 பேர் உயிரிழப்பு
இதே கோரிக்கையை வலியுறுத்தி போபால் விஷவாயுகசிவினால் பாதிக்கப்பட்டோர் சங்க தலைவர் பால்கிருஷ்ணா ராம்தியோ, சமூக சுற்றுச்சூழல் கண்கணிப்பு குழுவின் சுவேதா நாராயண், தொழிற்சங்க தலைவர் மகேந்திர பாபு ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.
பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் ஆயிரம் பேர் வேலை செய்ததில் 800 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் வரை பலியாகி உள்ளனர். தற்போது இந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் 10 ஆயிரம் டன் பாதரச கழிவுகள் சுத்தம் செய்யாமல் உள்ளது. இவற்றை சுத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு மக்களின் பங்களிப்போடு சுற்றுச்சூழல் கொள்கையை கொண்டுவர உள்ளது. இந்த கொள்கை கொடைக்கானலில் உள்ள பாதரச கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும்.
பாதரச கழிவுகளினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க நீதி மன்றத்தை அணுகியுள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இயற்கை அழகு நிறைந்த கொடைக்கானலை பாதுகாக்க தமிழக சுற்றுச்சூழல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications