கடையநல்லூரில் மீண்டும் மர்ம காய்ச்சல்-50 பேர் பாதிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் 50க்கும் மேற்பட்டோர் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.
அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஓழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்ஸ் குறைவால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து ரத்தத்தில் விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருத்தை செலுத்த வேண்டி உள்ளதால் அதற்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications