தாயிடம் தவறாக நடந்த இளைஞன் தலையில் கல்லைப் போட்ட மகன் கைது!
சென்னை: கண்ணெதிரே தாயை மானபங்கப்படுத்தியவன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்ட மகனை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் உள்ள நடைபாதையில் வசித்து வருபவர் ஏழைப் பெண்மணி கோமதி (47). கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தனது மகன் காண்டீபனுடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த டெல்லி பாபு (36) என்ற வாலிபர் அந்த வழியாக வந்தார்.
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கோமதியை பார்த்ததும் அருகில் சென்ற பாபு, கோமதியிடம் சில்மிஷம் செய்தார். இதனால் திடுக்கிட்டு விழித்த கோமதி வாலிபர் ஒருவர் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனே விழித்தெழுந்த காண்டீபன், தாயிடம் சில்மிஷம் செய்த வாலிபர் டெல்லி பாபுவுடன் சண்டை போட்டார்.
அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி டெல்லிபாபுவின் தலையில் போட்டார். இதில் டெல்லி பாபு மண்டை உடைந்தது. உடனே கோடம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெண்ணை மானபங்கம் செய்ததாக டெல்லி பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாயின் மானத்தைக் காக்க கல்லைத் தூக்கிய காண்டீபன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கு அந்தப் பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, காண்டீபனை விடுவிக்கக் கோரினர். ஆனால் போலீசார் விடவில்லை.












Click it and Unblock the Notifications