மாவோயிஸ்டுகள் புது நிபந்தனை: நாளை விடுவிக்கப்படுவாரா கடத்தப்பட்ட ஒரிசா எம்.எல்.ஏ.?
புவனேஸ்வர்: ஒரிசாவின் கோரபுட் சிறையில் உள்ள 3 முக்கிய தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை கடத்திய மாவோயிஸ்டுகள் புது நிபந்தனை விதித்துள்ளனர்.
ஒரிசாவின் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.ஜினா ஹிகாகாவை மாவோயிஸ்டுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடத்திச் சென்றனர். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்களான பழங்குடி அமைப்பைச் சேர்ந்தோரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
இதனை ஒரிசா அரசாங்கமும் ஏற்றுக் கொண்டு மாவோயிஸ்டு உறுப்பினர்களையும், பழங்குடியினரையும் விடுதலை செய்வதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனையாக கோரபுட் சிறையில் இருக்கும் மூத்த உறுப்பினரான சந்தா பனுஸானம் என்ற ஹாசி உட்பட 3 பேரை விடுவிக்க கோரியுள்ளனர். ஹாசி மீது மொத்தம் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரிசா மாநிலத்தில் 9 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 61 வழக்குகளும் இருக்கின்றன.
மேலும் தாங்கள் கோரியபடி அரசு விடுதலை செய்வதாக அறிவித்த 23 பேரையும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் மனைவி கவுசல்யா நாரயணபட்னா அருகே உள்ள பலிபேடா கிராமத்துக்கு நாளை அழைத்து வர வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கடத்தப்பட்ட இத்தாலியரை விடுவிக்கவும் மேலும் சில மாவோயிஸ்டுகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரிசா மாநில மாவோயிஸ்டுகள் குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் ஒரிசாவில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் கடத்தல் நாடகம் முடிவுக்கு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications