வேலூர் கோர்ட்டில் ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டிய 4 பேர்: வழக்கறிஞர்கள் போராட்டம்
வேலூர்: வேலூர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கும்பல் பிரபல ரவுடி ஜெகநாதனை ஓட, ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற ஜெகநாதன் (24). அவன் மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவன் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்தான். நீதிமன்றம் முன்பு உள்ள ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு கார் ஒன்று வந்தது. அதில் இருந்து கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் இறங்கினர்.
இதைப் பார்த்த ஜெகன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றான். ஆனால் அந்த 4 பேரும் அவனை நீதிமன்றத்திலேயே ஓட, ஓட விரட்டி கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்த ஜெகனை அங்கும் விடாமல் வந்து வெட்டினர். இதில் அறை முழுவதும் ரத்தக்காடானது.
அதன் பிறகு அந்த 4 பேரும் சாவகாசமாக நடந்து சென்று தப்பிவிட்டனர். இதைப் பார்த்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ரவுடியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் தலைவர் ஜெயகுமார் கூறுகையில்,
வேலூர் நீதிமன்ற வளாகத்தில் முதன்முறையாக கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பை உறுதிபடுத்தும் வரையில் நீதிமன்றத்தை புறக்கணிப்போம். இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications